ஓசூர்: கோடை காலத்துக்கு ஏற்ற ஆரோக்கிய உணவாக கருதப்படும் வெள்ளிரிக்காய் விற்பனை ஓசூரில் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம், பாகலூர் மற்றும் தமிழக – கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் கோடை கால வர்த்தகத்தை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் சாகுடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால், வெள்ளரிக் காய் 70 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்க்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால், கோடைக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையான வெள்ளரிக்காய் தற்போது, ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப் படுகிறது. கோடை தொடங்கியது முதல் ஓசூர் பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. இந்தாண்டு, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. சில வியாபாரிகள் கர்நாடக மாநிலத்திலிருந்தும் வெள்ளரிக்காயை கொள்முதல் செய்து உள்ளூரில் விற்பனை செய்து வருகின்றனர்.
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், கோடை காலத்துக்கு ஏற்ற ஆரோக்கிய உணவாக கருதப்படுவதால், கோடை காலத்தின் இதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தால் வெள்ளரி யின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.