திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோசாலையில் உள்ள மாடுகளுக்காக ரூ.2.50 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதிய கோசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக பசு மாடுகளை வழங்குவது வழக்கம். இவ்வாறு வழங்கப்பட்ட 60-க்கும் அதிகமான மாடுகள்,கன்றுகள் ஆகியவை கோயில் கொட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாடுகளுக்கு பல்வேறு வசதிகளுடன் புதிதாக கோசாலை அமைக்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 6.4.2023 அன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருவானைக் காவல் நெல்சன் சாலையில் உள்ள காட்டழகிய சிங்கர் கோயில் அருகே ஜவுளி ரங்கசாமி தோப்பில் ஏறத்தாழ 2.5 ஏக்கரில் புதிய கோசாலை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியது: இந்த புதிய கோசாலையில் தலா 50 மாடுகள் கட்டும் வகையில், 100 அடி நீளம், 33 அடி அகலத்தில் 3 ஷெட்டுகள் அமைக்கப்படுகின்றன. வெப்பத்தை கடத்தாத வகையில் மேற்கூரையில், பாலியூரேதீன் போம் (PUF) மெட்டல் ஷீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும், தேவையான இடங்களில் மின்விளக்குகள், பூச்சி, கொசுக்களிடமிருந்து மாடுகளை காக்க மின் விசிறிகள் அமைக்கப்படுகின்றன. இங்கு ஏற்கெனவே ஒரு ஆழ்துளை கிணறு உள்ளநிலையில், கூடுதலாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது. இது தவிர தண்ணீர் தொட்டிகள், தீவனங்களை சிதறாமல் உட்கொள்வதற்கு கவனை எனப்படும் தடுப்புகளும் அமைக்கப்படுகின்றன.
ஷெட்டின் கீழே அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தால் மாடுகளின் கால்கள் பாதிக்காத வகையில் ரப்பர் ஷீட்டுகள் போடப்படவுள்ளன. இவற்றை அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர தீவனங்களை வைக்கும் அறை, மருத்துவர் அறை ஆகியவையும் கட்டப்படுகின்றன. இந்த பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் முடிக்கப்பட்டு, கோயில் உள்ளே கோசாலையில் உள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும் என்றனர்.