தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் கடந்தாண்டு 16-வது இடத்திலிருந்த தஞ்சாவூர் மாவட்டம், நிகழாண்டு 26-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக உயர்ந்து வந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு குறைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் 104 அரசு மேல் நிலைப் பள்ளிகள், 109 மெட்ரிக் பள்ளிகள் 27 சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் (95.18 சதவீதம்) குறைவாகும். மேலும், கடந்த ஆண்டு மாநில அளவில் 16-வது இடம் பிடித்த தஞ்சாவூர் மாவட்டம், இந்தாண்டு 26-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 90.25 சதவீதம், 2019-ல் 91.05 சதவீதம், 2020-ல் 92.89 சதவீதம், 2022-ல் 94.69 சதவீதம், 2023-ல் 95.18 சதவீதம் என தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, கடந்த ஆண்டு 16 அரசுப் பள்ளிகள் உட்பட 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 8 அரசுப் பள்ளிகள் உட்பட 54 பள்ளிகள் மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும், மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. இது குறித்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூறியதாவது: பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்ததால், தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பெயரளவுக்கு பாடம் நடத்தினர். இதனால் தான் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண்களும் குறைந்துள்ளன என்றனர்.
இது தொடர்பாக கல்வியாளர்கள் சிலர் கூறியது: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், மாவட்ட அளவில் உள்ள கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால்தான் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாநில அளவில் பின்னோக்கி சென்றுள்ளது. இதற்கு இம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.