Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுடாப் ஆர்டர் சரிவால் தடுமாறிய சிஎஸ்கே: குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்களில் வெற்றி @ ஐபிஎல்...

டாப் ஆர்டர் சரிவால் தடுமாறிய சிஎஸ்கே: குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்களில் வெற்றி @ ஐபிஎல் | Gujarat Titans won by 35 runs against CSK


அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 232 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

232 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு ரன்னும், கேப்டன் கெய்க்வாட் பூஜ்ஜியம் எடுத்து விக்கெட்டை இழந்தனர். டாப் ஆர்டர் சரியாக அமையாத நிலையில் டேரில் மிட்சேல் மற்றும் மொயீன் அலி இணைந்து டாப் ஆர்டர் இழப்பை சரி செய்தனர். 10 ரன்களில் தொடங்கிய இவர்கள் கூட்டணி 119 ரன்கள் வரை நீடித்தது..

பின்னர் இருவரும் அரைசதம் அடித்தனர். சில மணிநேரங்களில் டேரில் மிட்சேல் 63 ரன்களும், மொயீன் அலிக்கு 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்தவர்களில் யாரும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. கடைசி ஓவர்களில் எம்எஸ் தோனி சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். எனினும் வெற்றி இலக்கு அதிகம் என்பதால் சென்னை அணியின் தோல்வி உறுதியானது. 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த முடிவு தவறானது என்பதை, குஜராத் அணியின் ஓப்பனர்களாக இறங்கிய ஷுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் உணர்த்தினர்.

இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து சிஎஸ்கே பவுலர்களுக்கு தண்ணீர் காட்டினர். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 25 பந்துகளில் கில் அரைசதம் எட்டினார். சிக்ஸரும், பவுண்டரிகளுமாக மைதானத்தில் பந்துகள் பறந்துகொண்டிருக்க, அவற்றை தடுக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணறினர்.

15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இருவரும் இணைந்து 190 ரன்களை குவித்தனர். ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாதனையை குஜராத் நெருங்குமா என்ற கேள்வி எழுந்தது.

50 பந்துகளில் முதல் ஆளாக கில் சதமடித்து மிரட்டினார். அதேபோல 50 பந்துகளில் சாய் சுதர்சனும் சதமடித்தார். அவரின் அந்த சிக்ஸ் அரங்கத்தை அதிரவைத்தது. இரண்டு ஓப்பனர்கள் கூட்டணி அமைத்து சதம் விளாசியது ரசிகர்களிடைய கவனம் பெற்றது.

சதம் விளாசிய மகிழ்ச்சியில், அடுத்த பந்தில் தூக்கி அடிக்க முயன்ற சுதர்சன் கேட்ச் கொடுத்து 103 ரன்களில் வெளியேறினார். ஒருவழியாக சிஎஸ்கேவுக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார் துஷார் தேஷ்பாண்டே.

சுதர்சனின் பிரிவை தாங்காமலோ என்னவோ கில் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 104 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். தேஷ்பாண்டே காட்டில் மழை. 2 விக்கெட்டை அள்ளினார்.

இறுதி பந்தில் ஷாருக்கான் 2 ரன்களுக்கு அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 231 ரன்களை குவித்தது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments