உதகை: உதகை ரோஜா பூங்காவில் வியாழக்கிழமை தொடங்கிய ரோஜா காட்சியில், வன உயிரிவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் 80,000 ரோஜாக்களை கொண்டு வன விலங்குகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவை முன்னிட்டு கடந்த 1995-ம் ஆண்டு, 10 ஏக்கர் பரப்பில் உதகை ரோஜா பூங்கா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. முதலில் 1,500 ரக ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டன. பின்னர் இந்த எண்ணிக்கை 3,800 ரக ரோஜாக்களும், 25,000 செடிகளும் என உயர்ந்தது. தென் கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த இப்பூங்கா, ‘கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருதுக்கு கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடந்த சர்வதேச ரோஜா மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது. இந்த பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுப்படுத்தப்பட்டு 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன.
தற்போது இந்தப் பூங்காவில் 4000 ஆயிரம் ரகங்களில் சுமார் 30,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பூங்காவில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு, உரிமிடப்பட்டு, தற்போது ரோஜாக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்த பூங்காவில் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மக்களவைத் தேர்தலால் ரோஜா காட்சி இந்த ஆண்டு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மலர் கண்காட்சியுடன், ரோஜா காட்சியையும் 10 நாட்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 19-வது ரோஜா காட்சி இன்று தொடங்கியது. ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 80,000 வண்ண ரோஜா மலர்களை கொண்டு வன உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் யானை, காட்டெருமை, மான், நீலகிரி வரையாடு, புலி, கரடி, ஆந்தை, புறா போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோஜா காட்சியை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “388 வகைகளில் 2.6 லட்சம் மலர்கள் பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலர் காட்சி 10 நாட்கள் நடைபெறும். மூன்று லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, குப்பை போடாமல், பிளாஸ்டிக் கொண்டு வராமல், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது மக்கள் பூங்கா சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். மலர்கள் நல்ல முறையில் அலங்கரிக்கபட்டிருகிறது.
இ-பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாம். அதை பெறுவது மிகவும் சுலபம். எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. செல் போனில் எந்த தேதியில் எத்தனை பேர் என்று தகவல் கொடுத்தால் 5 நிமிடத்தில் இ பாஸ் கிடைத்து விடும். யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து கிளம்பி, மேட்டுபாளையம் வந்துக் கூட பதிவு செய்து, இ-பாஸ் பெறலாம். சுற்றுலா பயணிகளுக்கு எந்த தடையும் கிடையாது. உயர் நீதிமன்ற உத்தரவு படி ஒரு கணக்கெடுப்புக்காக தான் இ பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
பூங்காவில் நுழைவு கட்டணம் 3 மடங்கு உயர்த்த பட்டுள்ளதாக கூறுகிறார்கள். நுழைவு கட்டணம் வருமானத்திற்காக போட வில்லை. இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும், சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் வசூலிக்கபடுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, முடிவு எடுக்கப்படும்” என்றார்.