நேபாள நாட்டின் தலைநகரம் காத்மண்டுவில் 2,533-வது ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்சவம் மே 8 தொடங்கி 12-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில்சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார்.
இவரது 2,533-வது அவதார விழாஇந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் மே 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் குறித்த வேத செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் இவரது ஜெயந்தி விழா அமைந்துள்ளது.
நேபாள நாட்டின் தலைநகரம் காத்மண்டுவில் உள்ள ஸ்ரீ பசுபதிநாத் கோயிலில், ஹவன் சாலாவில் 2,533-வது ஸ்ரீசங்கர ஜெயந்தி மஹோத்சவம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா மே 12-ம் தேதி வரை நடைபெறும். இதில் காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.
கடந்த 8-ம் தேதி தொடங்கிய விழாவில் வஞ்ச கல்பலதா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மிருத்யுஞ்சயஹோமம், நட்சத்திர ஹோமம்,ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது. மே 9-ம் தேதி ஆகாஷ பைரவ ஹோமம்நடைபெற்றது. மே 10-ம் தேதி (இன்று) ஸ்ரீவித்யா ஹோமம், மாதங்கி ஹோமம், வாராஹி ஹோமங்களும், 11-ம் தேதி விசேஷ ஹோமங்களும் நடைபெற உள்ளன.
ஆதிசங்கரரின் 2,533-வது ஜெயந்தி தினத்தில் (வைஷாக சுக்ல பஞ்சமி) மங்கள சண்டி ஹோமம், சங்கர ஜெயந்தி அவதார கட்ட பாராயணம் நடைபெற உள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.
மே 8 முதல் 12-ம் தேதிகளில் மாலை நிகழ்ச்சிகளாக தோடகாஷ்டகம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஆதி சங்கரர் புறப்பாடு, வேத ஸ்வஸ்தி, சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.