Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு: 80-க்கும் மேற்பட்ட விமானங்கள்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு: 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து | 300 Air India Express employees on leave at once: more than 80 flights cancelled


புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால், அந்நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. இதுதவிர, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் டாடா குழுமம் வசம் உள்ளன.

இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்றும் நடவடிக்கையை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். தங்கள் செல்போன்களையும் சுவிட்ச் ஆஃப் செய்தனர்.

விமானத்தை இயக்க ஊழியர்கள் இல்லாத நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு முதல் 80-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் விமான பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

கடைசி நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நாங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள். பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிப்பு வந்தது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னறிவிப்பின்றி விமான சேவையை ரத்து செய்ததால், எங்கள் வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தன்னை நம்பிய பயணிகளை கைவிட்டுவிட்டது’’ என்று கேரள பெண் பயணி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் விஸ்தாரா விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால், 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விஸ்தாராவை தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களும் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது டாடா குழுமத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இடையூறுக்காக வருத்தம்: விமான சேவை ரத்து குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில், ‘இந்த இடையூறுக்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையை திரும்ப வழங்குவது அல்லது வேறொரு நாளில் அவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட வழிவகை செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments