Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்கோவையில் ‘ஏசி’ விற்பனை 3 மடங்கு உயர்வு: நிபுணர்கள் அறிவுரை என்ன? | 3 Fold...

கோவையில் ‘ஏசி’ விற்பனை 3 மடங்கு உயர்வு: நிபுணர்கள் அறிவுரை என்ன? | 3 Fold Increase on ‘AC’ Sales on Coimbatore: What are the Experts’ Advice?


கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ‘ஏ.சி.’ விற்பனை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதமான தட்ப வெப்ப நிலை நிலவும் கோவை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், பகல் வேளையில் வெப்ப அலை வீசுவதாலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கோடை வெயில் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இதனால் ‘ஏர் கண்டிஷன்’ வாங்குவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஏர் கூலர்கள், டவர் ஃபேன்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, தனியார் விற்பனையகத்தின் நிர்வாகிகள் கூறும்போது, “கோடை வெயில் காரணமாக கோவையில் ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதம்தோறும் 800 முதல் 1300 வரை ஏசி இயந்திரங்கள் விற்பனையாகின. நடப்பாண்டில் மாதம் 1500 முதல் 2000 வரை ஏசி இயந்திரங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஏசி இயந்திரங்களின் விற்பனை மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது’’ என்றனர்.

அவிநாசி சாலையில் உள்ள தனியார் விற்பனை மையத்தின் மேலாண் இயக்குநர் சீனிவாசன் கூறும்போது, “ஏசி இயந்திரங்களை நடுத்தர மக்கள் வாங்கி வந்த நிலை மாறி குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது. 1 டன் ஏசி ரூ.30 ஆயிரம் முதல் கிடைக்கிறது. தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தும் வசதி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஏசி வாங்குவது அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மாதம் 500 அளவுக்கு ஏசி இயந்திரங்கள் விற்பனையாகின. நடப்பாண்டில் மாதம் 1000 ஏசி இயந்திரங்கள் வரை விற்பனையாகின்றன. ஏசி இயந்திரங்களின் தேவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் ஏசி இயந்திரங்களின் இருப்பு குறைந்து விற்பனையும் பாதித்துள்ளது. மேலும், ஏசி இயந்திரங்களை நிறுவ 7 நாட்கள் வரை ஆகின்றன” என்றார்.

திருச்சி சாலையில் உள்ள தனியார் விற்பனை மையத்தின் மேலாளர் சபீர் கூறும்போது, “கடந்த பிப்ரவரி முதல் ஏசி விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 1.5 டன் ஏசி இயந்திரங்கள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. ஏசி விற்பனை அதிகமாக உள்ள நிலையில் மின் கட்டணமும் நுகர்வோரை பாதிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் வரை ரூ.900 வரை செலுத்தி வந்தேன். தற்போது ஏசி பயன்படுத்துவதால் ரூ.1500 முதல் ரூ.2000 வரை மின் கட்டணம் அதிகமாகி உள்ளது” என்றார்.

இது குறித்து, ஏசி டெக்னீசியன்கள் கூறுகையில், “வெளியில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஏசி அளவை வைக்க வேண்டும். 25 டிகிரி செல்சியஸ் வைப்பது தான் சிறந்தது. அறைக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது. மின் சேமிப்பையும் உறுதி செய்கிறது” என்றனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments