வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக ஏசியைவிட விலை குறைவு இது. மேலும் ஏசியைக் காட்டிலும் ஏர் கூலர் பராமரிப்பும் குறைவுதான். ஆனால் ஏர்கூலர் உங்கள் ஊரில் உபயோகிக்க ஏற்றதா, என்பதையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏர் கூலர் காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படியில் வேலைசெய்யக் கூடியது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஈரப்பதம் குறைவாக உள்ள ஊர்களுக்கே இவை ஏற்றவை. உதாரணமாக, சென்னையின் சராசரி ஈரப்பத அளவு 70 சதவீதக்கும் அதிகம். அதனால் சென்னைக்கும் ஏர் கூலர் ஏற்றவை அல்ல எனச் சொல்லப்படுகிறது. ஏர் கூலர் ஈரப்பதத்தை அதிகரிக்கும் இயல்புடையது. ஏற்கெனவே 70 சதவீதக்கும் அதிகமான சென்னையின் ஈரப்பதம் அதிகமானால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.
பொதுவாகக் கடற்கரைப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால், அம்மாதிரியான ஊர்களில் ஏர் கூலர் பயன்பாடு ஏற்புடையது அல்ல எனச் சொல்லப்படுகிறது. ஆனால், ஈரப்பதம் குறைவாக உள்ள ஊர்களுக்கு ஏர் கூலர் ஏற்றவை. உதாரணமாக, டெல்லியின் ஈரப்பத அளவு குறைவு. இந்த மாதிரி நகரங்களில் ஏர் கூலரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுபோலவே டெல்லியின் ஏர் கூலரின் பயன்பாடு மிக அதிகம். அங்கு முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் அல்லாமல் எண்ணற்ற உள்ளூர்த் தயாரிப்பு ஏர் கூலரும் விற்பனையாவது பயன்பாடு அதிகமாக இருப்பதால்தான்.
ஆனால், சில நிறுவனங்கள் எல்லா ஈரப்பதத்திலும் செயல்படும் விதமாக ஏர் கூலர் வடிவமைத்துள்ளதாக விளம்பரங்கள் செய்துள்ளன. ஆனால், இது எத்தனை தூரம் வேலைசெய்யும் எனத் தெரியவில்லை.
‘ஏர் கூலர்’ சில அடிப்படை தகவல்கள்: எளிமையான தொழில்நுட்பத்தில் வேலை செய்யக்கூடியது ஏர் கூலர். வெயில் காலத்தில் ஜன்னல்களில் ஈரத் துணியை நனைத்து இடுவது நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வதுதான். கிட்டதட்ட அதே மாதிரியான ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் ஏர் கூலர் வேலைசெய்கிறது. எக்ஸாஸ்ட் ஃபேன் எப்படி அறைக்குள் உள்ள காற்றை எப்படி வெளியே தள்ளிவிடுகிறதோ அதே மாதிரி வெளிக்காற்றை உள்ளே இழுத்துக் குளிர்விக்கிறது ஏர் கூலர்.
இந்த ஏர் கூலருக்குள் எக்ஸாஸ்ட் ஃபேன் போல் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃபேன் உபகரணத்துக்குள் காற்றை இழுக்கும். இந்தக் காற்று உள் நுழையும் வழியில் காற்றைக் குளிர்க்கும் துளைகள் உள்ள அட்டை இருக்கும். இதன் மேலாக நீர்த் துளிகள் விழும்படி அமைக்கப்படிருக்கும். இதனால் வரும் காற்று இந்தத் துளைகள் உள்ள நனைந்த அட்டையில் பட்டுக் குளிராகும்.
இந்தக் குளிர் காற்று வெளியே வந்து அறையைக் குளிர்விக்கும். இதில் காற்றை உள்ளிழுக்கும் பகுதியில் வெற்றிவேர், தென்னை நார் போன்றவற்றை வைக்கும் வழக்கமும் இருக்கிறது. இதில் காற்றிலுள்ள தூசிகளைக் களையும்படியான புதிய தொழில்நுட்பமும் இப்போது வந்துள்ளது. இது அல்லாமல் ரிமோட் மூலம் வேலைசெய்யும் படியான ஏர் கூலரும் இப்போது சந்தையில் கிடைக்கிறது. ஏசி போல சுவரில் பொருத்திக்கொள்வது போன்ற ஏர் கூலரும் உள்ளது.
ஏர் கூலரின் மின்சாரப் பயன்பாடு ஏசியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புதிய காற்றைக் குளிர்வித்துத் தருவதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. ஏசியுடன் ஒப்பிடும்போது இதன் விலை மிகக் குறைவு. ஏர் கூலரைக் கையாள்வது எளிது. இதை ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். ஏசியுடன் ஒப்பிடும்போது ஏர் கூலரின் பராமரிப்புச் செலவு மிகக் குறைவு.
ஏர் கூலர் வேலை செய்வதற்கு அதற்குள் தண்ணீர் நிரப்பிவைப்பது அவசியம். இதனால் இதை அடிக்கடிச் சுத்தமாக்க வேண்டும். இல்லையெனில் இதில் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. சுத்தமாக்காமல் பயன்படுத்தும்போது அது ஆரோக்கியத்துக்குத் தீங்கு நேரும். ஏர் கூலர், காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படையில் வேலைசெய்யக் கூடியது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்குத் தீங்காகும்.
– ஆர்.ஜெயக்குமார்