புதுடெல்லி: கூகுள் நிறுவனம் இந்தியாவில் ‘கூகுள் வாலெட்’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேமென்ட் அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022) இதே மே மாதத்தில் நடைபெற்ற ‘கூகுள் இன்புட்/அவுட்புட்’ (i/o) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் பெயருக்கு ஏற்ற வகையில் அதன் செயல்பாடு இருக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் ‘ஏன் நமது வாலெட்களும் டிஜிட்டல் வடிவில் மாறக்கூடாது?’ என கூகுள் பொறியாளர்கள் யோசித்ததன் பலனாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக நம் கைகளில் இருக்கும் வாலெட்டை கொண்டு என்னென்ன செய்வோமோ அது அனைத்தையும் இந்த செயலியின் துணை கொண்டு செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. பிஸிக்கல் ஐட்டங்களின் டிஜிட்டல் வெர்ஷன் என இதை சுட்டிக்காட்டியுள்ளது.
டிஜிட்டல் வடிவில் போர்டிங் பாஸ், சினிமா டிக்கெட், பொது போக்குவரத்து டிக்கெட், கிஃப்ட் கார்டுகள், டிஜிட்டல் கார் சாவி போன்றவற்றை இதில் சேமித்து வைக்கலாம். அதன் மூலம் அதுகுறித்த நோட்டிபிகேஷனை நிகழ்நேரத்தில் இந்த செயலியில் பெற முடியும். கூகுள் நிறுவனத்தின் மற்ற செயலிகளுடன் இணைந்து இது இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இந்த வாலெட் செயலியை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் எடுத்து செல்லும் பயனர், போக வேண்டிய லொகேஷனை கூகுள் மேப் கொண்டு அறியலாம். மேலும், ஜிமெயிலுக்கு வரும் டிக்கெட் சார்ந்த தகவல்களை தானாகவே இந்த செயலியில் பார்த்துக் கொள்ளலாம். இதற்கு பயனர்கள் ஜிமெயிலில் ஸ்மார்ட் பெர்சனலைசேஷன் செட்டிங்கை ஆன் செய்திருக்க வேண்டும்.
இதற்காக சுமார் 20 நிறுவனங்களுடன் இப்போது கூகுள் கைகோர்த்துள்ளது. ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். Add to Wallet மூலம் பயனர்கள் தங்கள் வசம் உள்ள பாஸ், கூப்பன், டிக்கெட்டுகளை இதில் சேர்க்கலாம்.
அமெரிக்கா உட்பட உலக அளவில் இதே செயலியை பயன்படுத்தி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை Save செய்து பயன்படுத்தும் அம்சம் உள்ளது.