மதுரை: மதுரை எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஒருவர், விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் சுய விருப்பத்துடன் தனி ஒருவனாக பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நட்டு வளர்த்து வருகிறார்.
மதுரை எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொருளியல் பிரிவு மாணவர் பீமன். இவர் அரசு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். தற்போது அரசு விடுமுறை அளித்தாலும், பொழுதை வீணாக்காமல் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் சேர பயிற்சி பெற்று வருகிறார். மேலும், தாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் வளர்த்து பூங்காவாக்க விரும்பினார். அதன்படி தினமும் பள்ளிக்கு வந்து வளாகத்திலுள்ள இடத்தில் மண்ணை சீரமைத்து மராமத்து செய்து பூச்செடிகள் நட்டு வளர்த்து வருகிறார்.
அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இது குறித்து பீமன் கூறியதாவது: சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் நான் படித்த பள்ளியில் பூச்செடிகள், மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறேன். பூச்செடிகளை வாங்க ஆசிரியர் முருகேசன் உதவி செய்தார். எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் துறை வல்லுநராக விரும்புகிறேன் என்று கூறினார்.