மதுரை: சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி இந்திய பயிற்சி செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சாதனை நிகழ்ச்சியாக செவிலியர்களிடம் இருந்து புற்று நோயாளிகளுக்காக கூந்தல் தானம் பெறப்படுகிறது.
இதில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளடங்கிய 12-வது மண்டலத்தை சேர்ந்த இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் மற்றும் மாணவ செவிலியர் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் மே 4 முதல் கூந்தல் தானம் செய்து வருகின்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர் எம்.சாந்தி தலைமை வகித்தார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், வேலம்மாள் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர் ரா.ரேவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஓய்வு பெற்ற செவிலியர் சுகுணா துரைசாமி, புற்று நோயிலிருந்து குணமடைந்த சோனியா மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தில் 15 இடங்களில் நடைபெறும் கூந்தல் தானம் பெறும் நிகழ்வில் தமிழகத்தில் உள்ள அனைத்து செவிலிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு கூந்தல் தானம் செய்கின்றனர். இறுதி நிகழ்ச்சி மே 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.