ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கிராமத்தில் அமைந்துள்ள சமய கருப்பணசாமி கோயிலுக்கு பக்தர் ஒருவர், 470 கிலோ எடையில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அரிவாளை நேர்த்திக் கடனாக செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இந்த கிராமத்தில் அமைந்துள்ள சமய கருப்பணசாமி கோயில் கருப்பையாவின் குலதெய்வக் கோயிலாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையா குடும்பத்தின் சார்பில், இக்கோயிலில் வேண்டிக்கொண்டனர்.
வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, சமய கருப்பண சுவாமி கோயிலுக்கு, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பிரத்யேகமாக செய்யப் பட்ட 470 கிலோ எடையில் 21 அடி உயரமுள்ள பிரம்மாண்ட அரிவாளை நேர்த்திக் கடனாகச் செலுத்தினர். இந்த அரிவாள் கிரேன் உதவியுடன் கோயில் வாசலில் நிலை நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்து கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.