திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்விருப்பன் திருநாள் என்று அழைக்கப்படும் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, கண்ணாடி அறையைச் சென்றடைந்தார்.
மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் உலா வந்து சந்தனு மண்டபம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையைச் சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (ஏப்.29) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையைச் சென்றடைந்தார்.
தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் மே 6-ம் தேதி நடைபெறுகிறது. மே 8-ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.