ஈடன் கார்டன்ஸில் வெள்ளிக்கிழமை பொழிந்த சிக்சர்கள் மழை, இந்தக் கோடை வெயிலில் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கலாமே தவிர, கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. ஐபிஎல் என்னும் கிரிக்கெட் குளோபல் வார்மிங், கிரிக்கெட்டின் சூழலியலையே நாசம் செய்து வருகிறது. உண்மையான குளோபல் வார்மிங்கில் நிலத்துக்குள் கடல் ஊடுருவது போல் ஐபிஎல் குளோபல் வார்மிங்கில் எல்லைக்கோடுகள் மைதானத்துக்குள் வந்தபடியே இருக்கின்றன. ஹர்ஷா போக்ளே கூறுவது போல் “நாளுக்கு நாள் எல்லைக் கோட்டின் தூரம் குறைந்து கொண்டே வருகின்றன.”
கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டத்தில் மொத்தம் 523 ரன்கள் 38.4 ஓவர்களில் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42 சிக்சர்கள். இதில் ராகுல் சஹாரும் பெரிய அளவில் சுனில் நரைனும் தப்பினர் என்றே கூற வேண்டும். இதை வைத்துக் கொண்டு ஐபிஎல் ஆதரவாளர்கள் சிலர், ‘திறமை இருந்தால் எந்த கண்டிஷனிலும் வீசுவார்கள்’ என்று கூறுவார்களேயானால், நாட்டில் 62 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்னும் பொருளாதார சூழ்நிலையில், ‘திறமை இருந்தால் வேலை கிடைக்கும்’ என்று கூறுவது போன்ற வாதமே.