நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரம் கோடை விடுமுறையை முன்னிட்டு குமரி சுற்றுலா மையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பகல் நேரத்தில் ஓட்டல் மற்றும்தங்கும் விடுதிகளில் ஓய்வெடுக்கும் சுற்றுலா பயணிகள் காலை, மற்றும்மாலை வேளைகளில் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், உதய கிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் முக்கிய சுற்றுலா மையங்களில் குவிகின்றனர்.
பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படாததால் தற்போது திற்பரப்பு அருவியில் குறைந்த அளவே நீர் விழுகிறது. வெயிலுக்கு இதமாக சுற்றுலா பயணிகள் இதில் குளித்து மகிழ்கின்றனர்.
திற்பரப்பு அருவி பகுதிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறைக்கு வருவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 100 முதல் 200 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும்.
அணையில் 43.10 அடி தண்ணீர் உள்ளதால் அருவி பகுதியிலும் மிதமான தண்ணீர் கொட்டுவதுடன் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் நிலத்தடி குடிநீர் இருப்பும் அதிகரிக்கும். விவசாயிகளும் பயன்பெறுவர். இதனால் பேச்சிப்பாறை அணையில் தாமதமின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுற்றுலா பயணிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.