வாசிம்: ஜேஇஇ முதன்மைத் தேர்வில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகனான நீலகிருஷ்ண கஜரே அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
நீலகிருஷ்ண கஜரே மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை ஒரு விவசாயி. இந்நிலையில், நன்றாக படித்து குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்தார் நீலகிருஷ்ண கஜரே.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.
கடந்த வியாழக்கிழமை ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இதில் அகில இந்திய அளவில் நீலகிருஷ்ண கஜரே முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜேஇஇ தேர்வில் முதல் இடம் பிடித்தது குறித்து நீலகிருஷ்ண கஜரேயின் தந்தை கூறுகையில், “எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. நீலகிருஷ்ண நன்றாக படிக்கும் மாணவன். விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடுவான். இரண்டு மணி நேரம் படிப்பான். அதன் பிறகு சிறிது நேரம் மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவான். மீண்டும் 8.30 மணிக்கு படிக்கத் தொடங்கி விடுவான். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் அவன் ஜேஇஇ தேர்வுக்காக செலவிட்டான். இரவில் 10 மணிக்கெல்லாம் உறங்கி விடுவான். எங்கள் மகனின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது” என்று குறிப்பிட்டார்.