தாணே: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் குருப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள தாதோஜி கோன்டேவ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது.
தமிழக அணியின் சாய் சுதர்ஷன் அபாரமாக ஆடி 125 ரன்கள்(144 பந்துகள், 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) குவித்தார். என்.ஜெகதீசன் 2, சாய் கிஷோர் 3, அபராஜித் 40, விஜய் சங்கர் 24,இந்திரஜித் 24, தினேஷ் கார்த்திக் 47, ஷாருக் கான் 9, சக்கரவர்த்தி 4 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய கோவா அணி50 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கோவா அணியில் அதிகபட்சமாக கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்கள் எடுத்தார்.
தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, ரவிநிவாசன் சாய் கிஷோர், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2, டி.நடராஜன், சாய் சுதர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.